இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!

Updated: Thu, Jan 18 2024 16:34 IST
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்! (Image Source: Google)

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட கடைசி மூன்றாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்தாக அமைந்திருந்தது. இந்த போட்டியின் மூலமாக ரசிகர்கள் புதிய கிரிக்கெட் விதி ஒன்றையும் நேற்று தெரிந்து கொண்டார்கள். இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு ஆட்டம் செல்லும் பொழுது, முதல் சூப்பர் ஓவரில் ஆட்டம் இழந்த பேட்ஸ்மேன், பந்து வீசிய பந்துவீச்சாளர்கள், இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை செய்ய முடியாது என்பது விதி.

இந்த விதியை நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் நடந்து முடிந்த போட்டியில் இருந்து தெரிந்துகொண்டார்கள். ஆனால் ஒரு சுவாரசிய விஷயமாக இது இரண்டு அணிகளுக்கும் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. முதல் சூப்பர் ஓவரில் இந்தியா பேட்டிங் செய்யும்பொழுது கடைசி பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தன்னால் இரண்டு ரன்கள் வேகமாக ஓட முடியாது என்று வெளியேறி ரிங்கு சிங்கை வரவழைத்தார். இது தன்னைத்தான் அவுட் என்று அறிவித்துக் கொள்வது.

இந்த முறையில் அவர் ஆட்டம் இழந்ததாக எடுத்துக் கொண்டால், அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவரில் அவர் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவர் இரண்டாவது ஓவரில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஆஃப்கானிஸ்தான் தரப்பிலிருந்து எந்தக் கேள்வியும் முன் வைக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விதி குறித்த தெளிவு கிடையாது.

இதுபற்றி பேசி இருக்கும் ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் “எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது. இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை. நாங்கள் விதிகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்கிறோம். மேலும் எங்களுக்கு இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்த விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

நாங்கள் இரண்டாவது ஓவரையும் ஓமர்சாய் வீச வேண்டுமென்று நினைப்போம். ஆனால் கடைசியில் ஃபரீத் சிறப்பான முறையில் வீசி முடித்தார். எதிர்காலத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் எழுத்துப்பூர்வமாக போட்டிக்கும் முன்பாக தரப்பட வேண்டும். நாங்கள் ஒரு நல்ல போட்டியை விளையாடி இருக்கிறோம். ஆனால் கடைசியில் நாங்கள் விளையாடியதை விட்டு இந்த விதிதான் பேசுபொருளாக மாறி இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை