எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!

Updated: Fri, Sep 15 2023 13:29 IST
Image Source: Google

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முக்கியமான போட்டியான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முகமது ரிஸ்வான் 86 ரன்களையும், இஃப்திகார் அகமது 47 ரன்களையும் குவித்து அசத்தினர். 

பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 42 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அலங்கா 49 ரன்களையும், குசால் மெண்டிஸ் 91 ரன்களையும், சமர விக்ரமா 48 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியது. 

பின்னர் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “கடைசி கட்டத்தில் நாங்கள் எங்களது அணியின் பெஸ்ட் பவுலர்களுடன் செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் ஷாகின் அஃப்ரிடி 41ஆவது ஓவரை வீசவைத்துவிட்டு இறுதி ஓரை ஸமான் கானிடம் வழங்கினோம். ஏனெனில் ஸமான் கான் இறுதி ஓரை சிறப்பாக வீசுவார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. ஆனால் இலங்கை அணி எங்களது திட்டங்களை சிறப்பாக எதிர்கொண்டு விட்டார்கள்.

இந்த போட்டியில் எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த போட்டியில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் பவுலிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் எங்களது தரத்திற்கு ஏற்ப விளையாடவில்லை. அதேபோன்று இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது பாட்னர்ஷிப் நாங்கள் தோற்க காரணமாக இருந்தது. இறுதிவரை நாங்கள் போராட்டத்தை அளித்ததாகவே கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை