
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
அதேசமயம் அந்த அணியின் மீது கூடுதல் கவனம் ஈர்க்கும் வகையில் 13 வயதே ஆன பிகாரைச் சேர்த்த வைபவ் சூர்யவன்ஷியை அந்த அணி நிர்வாகம் ரூ.1.10 கோடி செலவழித்து ஒப்பந்தம் செய்துள்ளது. மேற்கொண்டு யு19 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.