
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டோனி டி ஸோர்ஸி 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து 129 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் ஐடன் மார்க்ரம் 47 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.