1st Test, Day 4: அரைசதம் கடந்த கேஎல் ராகுல்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது.

ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களுடனும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 99 ரன்களிலும், பென் டக்கெட் 64 ரன்களிலும் என ஆட்டமிழக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை இதில் கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், ஷுப்மன் கில் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 8 ரன்களுடன் நடையைக் கட்ட, மறுபக்கம் கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
Also Read: LIVE Cricket Score
மேலும் ராகுலுடன் இணைந்த ரிஷப் பந்தும் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன் காரணமாக நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பந்த் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளன்ர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனைத்தொட்ர்ந்து 159 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now