2nd Test, Day 3: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது.

Birmingham Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக்- ஜேமி ஸ்மித் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 30 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 269 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 89 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஸாக் கிரௌலி உள்ளிட்டோர் சோபிக்க தவியதன் காரணமாக அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஹாரி புரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஹாரி புரூக்குடன் இணைந்த ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைக் கடந்தது.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாரி புரூக் 91 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 338 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி எஞ்சிய இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now