
Lord's Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 99 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பென் டக்கெட்டும், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலியும் அடுத்தடுத்து நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீல் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் - ஒல்லி போப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், மறுபக்கம் ஒல்லி போப் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஹாரி புரூக்கும் 11 ரன்களில் நடையைக் கட்டினார்.