
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஷான் மசூத் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்தது.