
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் இருந்து 200 வீரர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்வைத்த வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. அதன்படி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் சிஎஸ்கேவிற்காக விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபாரமாக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது இடத்தை நிரப்பும் வகையில் சிஸ்கே அணி இந்த ஏலத்தில் செயல்படும் என எதிபார்க்கப்படுகிறது. அதன்படி சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.