
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 122 ரன்ன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களையும், ஷுப்மன் கில் 38 ரன்களையு சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 134 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அடத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான இத்தொடரில் மொத்தமாக 618 ரன்களை 108 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் 600 ரன்களை எடுத்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், திலிப் சர்தேசய், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருக்கு இச்சாதனையை படைத்துள்ளனர்.