அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். ஆனால் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்! (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்க வேண்டிய நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி ஐசிசி அறிவித்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் 28ஆம் தேதி வரையில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு சாதாரண மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது.
ஆசியக் கோப்பை தொடரின்போது அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் வலதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை. எனவே அனுபவம் மற்றும் திறமையான மூத்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்தை கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் அக்சர் படேல் காயம் அடைந்த காரணத்தினால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.
தற்போது அஸ்வின் குறித்து பேசியுள்ள ஏபிடிவில்லியர்ஸ் “அவரை தற்போது இந்திய அணிக்குள் கொண்டு வந்தது நம்ப முடியாத நடவடிக்கை. இது தென் ஆப்பிரிக்கா மற்றும் பல அணிகளுக்கு நல்ல விஷயம் கிடையாது. அஸ்வின் புத்திசாலி மற்றும் அனுபவம் வாய்ந்தவர். அவர் போட்டியின் பெரிய தருணங்களில் சிறப்பாக விளையாடியிருப்பவர்.
நம்ப முடியாத திறமைகளைப் பெற்றிருக்கிறார். மேலும் பேட் மற்றும் பந்து இரண்டிலும் ஆட்டத்தை புரிந்தவராக இருக்கிறார். அவர் அணிக்கு ஒரு சிறந்த சேர்க்கையாளர். அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? என்று எனக்குப் புரியவில்லை. நான் அவருடைய பெரிய ரசிகன். அவர் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். ஆனால் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்” என்று கூறியுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News