
தற்போது வங்கதேசம் சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவில் இரண்டிலும் தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 10ஆம் தேதி நடக்க உள்ளது.
இதற்கிடையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் நடுவே பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மாவின் கையில் பந்து பலமாகப்பட்டதால் வலியில் துடித்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். அப்போது அவருக்கு எலும்பு முறிவு இல்லை. எலும்பு சற்று விலகி உள்ளது என்று தெரியவந்துள்ளது.
அத்தகைய வீக்கத்துடன் ஒன்பதாவது வீரராக களம் இறங்கி இந்திய அணிக்கு கிட்டத்தட்ட வெற்றியை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தார் ரோகித் சர்மா. இனியும் ரோகித் சர்மா மீது ரிஸ்க் எடுக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக அவரை நாடு திரும்பச் சொல்லி ராகுல் டிராவிட் உட்பட மருத்துவ குழுவினர் வலியுறுத்தி இருக்கின்றனர்.