
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் பல ரசிகரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஐந்தாம் நாள் வரை சென்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வந்தது. ஆரம்பத்தில் சில மணிநேரம் இந்திய அணி முனைப்புடன் பந்துவீசியது. ஆஸி., அணி விக்கெட் இழக்காமல் விளையாடியதால், போட்டி டிராவை நோக்கி சென்றது.
ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய 20 ஓவர்கள் மீதமிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சுப்மன் கில், புஜாரா ஆகியோருக்கு ஓவர்களை கொடுத்தார் ரோகித் சர்மா. பின்னர் இரு அணி கேப்டன்களும் சமரசம் செய்து கிட்டத்தட்ட 15 ஓவர்கள் மீதமிருக்கும்போது போட்டியை முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் புஜாரா பவுலிங் வீசியதை ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டலடித்திருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது, “நான் இப்போது என்ன செய்யட்டும்? பவுலிங் வேலையைவிட்டு போய்விடவா?” என ஹிந்தியில் பதிவிட்டிருந்தார். அஸ்வின் இப்படி நக்கல் பாணியில் கிண்டலடிப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல.