
தற்பொழுது ஆசியக் கோப்பைத் தொடர் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால், வரவேற்பு குறைந்து இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தற்பொழுது ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. மிக முக்கியமாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அடித்திருக்கும் 49 சதங்களை முந்தி உலகச்சாதனை செய்வதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் சீரான வெளிப்பாட்டை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல கொண்டு இருக்கிறார். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறந்த செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். எனவே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விராட் கோலி, பாபர் ஆசாம் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.