
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.