
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது உறுதியாகியுள்ளது.