Advertisement

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!

தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன் என பாபர் ஆசாம் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 15, 2023 • 19:57 PM
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன. 

அதிலும் குறிப்பாக பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப்பட்டியளில் 5ஆம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தோல்வியே அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக தடுத்துள்ளது. 

Trending


அதுமட்டுமின்றி கேப்டன் பாபர் ஆசாமின் செயல்பாடுகளும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் கேப்டன்ஸியில் எடுக்கும் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், அவரது பேட்டிங் ஃபார்ம் என அனைத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது கேப்டன்சி குறித்த கேள்விகளும் வலுத்தன. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டுவந்த பாபர் ஆசாம், இன்று தனது கேப்டன் பதவியிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபர் ஆசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை வழிநடத்த அழைக்கப்பட்டது இப்போது நினைவில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் என்று அனைத்து சோதனைகளையும் சந்தித்தேன். ஆனால் பாகிஸ்தான் அணி மீதான மதிப்பை உயர்த்தவும், பெருமையடைய செய்யவும் உண்மையான போராடினேன். 

 

ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை நம்பர் 1 இடத்திற்கு அழைத்து சென்றேன். நிச்சயம் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த பலன் தான் அது. தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். 

அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளில் வீரராக விளையாடுவேன். அடுத்த கேப்டனுக்கு எனது முழு ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன். இத்தனை காலமாக என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” என கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement