
16ஆவது சீசன் ஐபிஎல் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் ஆரம்பத்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக வேகமாக ஓடிய போது துரதிஷ்டவசமாக தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதனால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான வலியால் தவித்த அவர் மருத்துவரின் முதல் உதவிக்கு பின் மிகவும் போராட்டமாக எழுந்து நடந்து இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
என்ன தான் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தாலும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை கொண்ட அவர் இப்போட்டியில் காயமடைந்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக அவரும் தேர்வாகியுள்ளார்.
அப்போட்டியில் அனுபவமற்ற கேஎஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அல்லது ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்களை அடித்து நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இறுதிப்போட்டியில் விளையாடாமல் போனால் நிச்சயமாக அது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகவே அமையும் என்பதில் சந்தேமில்லை. தற்போதைய நிலைமையில் காயம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது தெரிய வரும்.