
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ராகுல் டிராவிட் உடன் 2 ஆண்டுகளுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி என்று 3 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் ராகுல் டிராவிட்டுக்கு பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து உலகக்கோப்பை தொடருக்கு பின் ராகுல் டிராவிட் பேசுகையில், எங்களின் கவனம் முழுக்க உலகக்கோப்பை தொடர் மீதே இருந்தது. அதனால் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லை என்று பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் விவகாரத்தில் பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ராகுல் டிராவிட் இந்திய அணிக்குள் கொண்டு வந்த கலாச்சாரத்தை தொடர வேண்டும் என்று பிசிசிஐ நினைக்கிறது.