
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியதில் இருந்து, டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கேஎஸ் பரத், இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் கீப்பராக செயல்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்றார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், குறை சொல்லும் அளவிற்கு செயல்படவில்லை. ஏனென்றால் கால் மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு திரும்பிய கேஎல் ராகுல், கூடுதல் பொறுப்பிலும் அசத்தியது பாராட்டுகளை பெற்றது.
என்னதான் வெளிநாடுகளில் கேஎல் ராகுல் சிறப்பாக விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களின் பந்துகளை பிடிப்பது சாதாரணமல்ல. இதனால் சொந்த மண்ணில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.