
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.
தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாமி அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.