
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.