
உலகப்புகழ்பெற்ற டி20 லீக் தொடரான இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 16 சீசன்களைக் கடந்து வெற்றிகரமான 17ஆவது சீசன் அடுத்த ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கின.
குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக மும்பை இந்தியன்ஸ் வாங்கியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதே போல மும்பையில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை 17.5 கோடிகள் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியதும் ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்துள்ளது.
வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவரை ஓய்வு பெற்ற பொல்லார்ட்க்கு மாற்று வீரராக மும்பை பெரிய தொகை கொடுத்து வாங்கியது. இருப்பினும் கடந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவரை விடுவித்து 17.50 கோடிகளை மும்பை மிச்சப்படுத்தியது. மறுபுறம் சாதாரணமாகவே ஓரிரு வீரர்களுக்காக பெரிய தொகையை கண்ணை மூடிக்கொண்டு செலவிடக்கூடிய பெங்களூரு இம்முறை கேமரூன் கிரீன் மீது விழுந்துள்ளது.