
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ரோஹித் சர்மாவுடன் கலந்தாலோசித்தார். ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயரின் மிகப்பெரும் பலவீனமாக பார்க்கப்படுவது அவரது ஷார்ட் பால் ஷாட் தேர்வு தான். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவதுடன், அதில் விக்கெட்டுகளையும் இழந்துள்ளார்.