Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 26, 2025 • 10:52 PM

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 26, 2025 • 10:52 PM

லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செதிகுல்லா அடலும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டாமிழந்தார். 

Trending

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

பின்னர் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இவர்கள் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஸத்ரானுடன் இணைந்த நபியும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் 300 ரன்களைக் கடந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் இப்ராஹிம் ஸத்ரான் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில், அதிரடியாக தொடங்கிய பில் சால்ட் 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பென் டக்கெட் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக்கும் தனது பங்கிற்கு 25 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய ஜோஸ் பட்லர் 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிவிங்ஸ்டோனும் 10 ரன்னுடன் நடையைக் கட்டினார். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ஜோ ரூட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 17ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியையும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அதன்பின் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 120 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. 

அப்போது களத்தில் இருந்த ஜேமி ஓவர்டன் - ஜோஃப்ரா ஆர்ச்சர் இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இங்கிலாந்து அணியும் எளிதாக இலக்கை எட்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஆனால் அச்சமயத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 ரன்களை எடுத்திருந்த ஜேமி ஓவர்டன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 14 ரன்களை எடுத்திருந்த ஜோஃப்ரா ஆர்ச்சரும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிபெற 13 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் ஆதில் ரஷித்தும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 5 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்தது. அதேசமயம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றோடு வெளியேறியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement