சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஸ்மித், கேரி அரைசதம்; இந்திய அணிக்கு 265 டார்கெட்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கன்னொலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கூப்பர் கன்னொலி ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்த கையோடு வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மார்னஸ் லபுஷாக்னே 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதற்கிடையில் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் ஸ்மித்துடன் இணைந்த அலெக்ஸ் கேரியும் சிறப்பாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 73 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், பென் துவார்ஷூயிஸ் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 60 ரன்களை எடுத்திருந்த அலெக்ஸ் கேரி ரன் அவுட் முறையிவில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now