
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரா எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலகக் கோப்பை தொடரிலும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.