
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கோப்பையை வென்று சாதனைப்படைத்தது. அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியானது சூப்பர் 8 சுற்றில் அடைந்த அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது.
இதனையடுத்து இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வாதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் வார்னர் ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.