
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் கோப்பையை வெல்வதற்காக பிற அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிசியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான லக்னோ அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மார்க் வுட் விலகியுள்ளார். அதேசமயம் டேவிட் வில்லியும் முதல் சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான். இதனால் தற்போதுள்ள லக்னோ அணி அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடந்த சில நாள்களாக மீதமுள்ள வீரர்களின் செயல்படாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் திறமை அபாரமானதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.