
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று (டிசம்பர் 06) தொடக்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார்.இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெஸ்வால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினர். இதில், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில்லும் 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்ம 3 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 21 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளி விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 22 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழந்தார்.