
கடந்த 2018ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்திபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த உப்புத்தாளைக் கொண்டு பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் பந்தைச் சேதப்படுத்த முயன்றது தொடர்பான குற்றச்சாட்டை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. வார்னர் கேப்டனாவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
நன்னடத்தை விதிகளில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து கேப்டன் பதவியை வகிக்க தனது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்தார் டேவிட் வார்னர். தண்டனையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் அவர் இறங்கினார். இதனால் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு வார்னருக்கு இருப்பதாகக் கூறப்பட்டது.