
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் ரிஷப் பந்த் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன், அணியின் மூத்த வீரர் கருண் நாயர் மற்றும் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், முகமது ஷமி, அக்ஸர் படேல் மற்றும் இஷான் கிஷான் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. மேலும் வீரர்கள் இங்கிலாந்து சென்றடைந்த காணொளியை பிசிசிஐ தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.