
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும், 236 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களையும், மிலன் ரத்நாயக்கா 72 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 18 ரன்களிலும், டேன் லாரன்ஸ் 30 ரன்களிலும், கேப்டன் ஒல்லி போப் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 42 ரன்களுக்கும், ஹாரி புரூக் 56 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 118 ரன்கள் முன்னிலை பெற்றது.