ENG vs ZIM, Test Day 1: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து; தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இன்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 498 ரன்களைக் குவித்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தரப்பில் ஒல்லி போப் 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 172 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய ஹாரி புரூக் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 565 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் கரண் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் பென்னட்டுடன் இணைந்த கேப்டன் கிரேய்க் எர்வின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரையன் பென்னட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் கிரேய்க் எர்வின் 42 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 25 ரன்னிலும், சிக்கந்தர் ரஸா மற்று வெஸ்லி மதவெரே உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து 26 பவுண்டரிகளுடன் 139 ரன்களை எடுத்த பிரையன் பென்னட்டும் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் தஃபட்ஸ்வா சிகா 22 ரன்களையும், பிளெசிங் முஸரபானி 12 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது ஃபாலோ ஆன் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 300 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்பே அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை.
Also Read: LIVE Cricket Score
அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பிரையன் பென்னட் ஒரு ரன்னிலும், கேப்டன் கிரேய்க் எர்வின் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now