
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பில் தொடங்கி, பிளேயிங் லெவன் தேர்வு செய்தது மற்றும் டாஸ் வென்றப்பின் எடுத்த தவறான முடிவுகள் என அடுக்கடுக்காக இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டு வருகின்றன.
மேலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் போதிய ஆக்ரோஷம் இல்லை. இது எதிரணியை எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வட்டத்தில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆக்ரோஷமான கேப்டன் பொறுப்பை வெளிப்படுத்தினார். அப்போதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை இந்திய அணி வந்தது. ஆனால் முதல் அணியாக உள்ளே வந்தது.
இம்முறை ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் தட்டுதடுமாறி வந்தது. மேலும் பெரும்பாலான தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பே வகிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் என இரண்டு முக்கியமான தொடர்களில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த சமயத்தில் ரகானே கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை பற்றி மற்றவர்கள் பேசி வரும் சூழலில் விராட் கோலி கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் மார்கன்.