
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெல்லி டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகள் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியும்.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை நம்பர் ஒன் என்ற கிரீடத்தை காக்க வேண்டும் என்றால் இந்தியாவில் தங்களது திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். காரணம் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. மாறாக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றிருக்கிறது. இதற்கு பழி தீர்க்க வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா அணியை சிதறடித்து விட்டார்கள். உலகின் நம்பர் ஒன் அணியை 177 ரன்ளுக்கும் 91 ரன்களுக்கும் சுருட்டிய இந்திய அணி தற்போது இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை 113 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் சாய்த்தது.