
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி பல சாதனைகள் படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சாதனைகள் குறைவாக படைத்திருக்கின்றனர். குறிப்பாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணி குறைவான சாதனைகளையே படைத்துள்ளது எனப் பேசினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்துக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்கப் பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “நாங்கள் சில ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் போட்டிகளில் கோப்பையை வெல்லவில்லை. ஆனால், அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அணிகளில் இந்திய அணியே சிறந்த அணி. நாங்கள் வெளிநாடுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.
அதிலும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். மைக்கேல் வாகனின் இந்தியாவின் சாதனை தொடர்பான கருத்துக்குப் பிறகு இந்தியாவில் பலர் இந்திய அணி குறைவான சாதனைகளை படைத்துள்ள அணியா என ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், இது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியிலிருந்து இந்திய அணியின் தோல்வியிலிருந்து வலிமையாக மீண்டும் வரும் திறன் வெளிப்பட்டது.