
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் நேற்று இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மல்லுகட்டின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதற்கு முந்தைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.