
இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை 2 மிகப்பெரிய தொடர்களிலும் தோற்று வெளியேறியது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 முக்கியமான தொடர்களிலும் இந்திய அணி தோற்று அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அதனால் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய கேப்டனை நியமித்து, சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு, இளம் வீரர்களை அணியில் எடுத்து ஆடும் அணுகுமுறையையே மொத்தமாக மாற்றவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்தார். அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் கபில் தேவுக்கு அடுத்து ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதை காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் பிரித்வி ஷாவும் இருப்பதாக கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். இளம் திறமையான வீரரான பிரித்வி ஷாவை மீண்டும் இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய அணியில் தனக்கான இடத்தைக்கூட இன்னும் பிடிக்காத பிரித்வி ஷாவை அடுத்த கேப்டன் என்று கம்பீர் கூறியுள்ளார்.