
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இன்னும் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர், மேலும் மேலும் சாதிக்க விரும்புகிறார்கள்.