
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணபங்களையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விணப்பத்திற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணபங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
அதன்படி, அடுத்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அத்தொடரிலிருந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படுவார் என்ற தகவலானது வெளியாகியுள்ளது. மேலும் கௌதம் கம்பீரின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இம்மாத இறுதியில் பிசிசிஐ வெளியிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.