
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரு விலகியதால் அவர்களுக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான், சௌரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், அல்லது இருவரும் அணியில் சேர்க்கப்படுவார்களாக என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், எனது காயத்திற்கு பிறகு எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பானது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.