
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் ஜோ ரூட், ஹாரு புரூக், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் அடுத்த கேப்டனுக்கான தேர்வில் இருந்தனர்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸும், டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக்கும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனுக்கான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.