
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறுகிறது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் நல்ல தொகைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்துக்காக அறிமுகமான அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்து 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.
மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் தொடரில் அசத்தியதால் விராட் கோலி போல இங்கிலாந்துக்காக அசத்துவார் என்று அவரை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டினார். இந்நிலையில் ஐபிஎல் 2023 ஏலத்தில் 13.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஹைதராபாத்துக்காக வாங்கப்பட்ட ஹரி ப்ரூக் பாகிஸ்தானில் அசத்தினாலும் இந்திய மைதானங்களில் எளிதாக அசத்தி விட முடியாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
ஆனால் அதற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் 55 பந்துகளில் சதமடித்த அவர் போட்டியின் முடிவில் “இந்திய ரசிகர்களின் வாயை மூடியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று வெளிப்படையாக பேசி பதிலடி கொடுத்தார். ஆனால் அதன் பின் மோசமாக விளையாடிய அவர் 2023 சீசனில் மொத்தமாக வெறும் 190 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் எடுத்து ஹைதராபாத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள்.