
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே, சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு பேட்டியில் சஹா கூறுகையில், “உங்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. புதிய விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்கள் என்றார் பயிற்சியாளர் டிராவிட். என் வயதா அல்லது உடற்தகுதியா - எது இதற்குக் காரணம் எனக் கேட்டேன்.
இள வயது திறமைகளைத் தேர்வு செய்யவுள்ளார்கள். நீங்கள் 11 வீரர்களில் ஒருவராக இல்லாமல் இருப்பதால் வேறு வீரர்களை முயற்சி செய்கிறோம் என்றார். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் எடுத்து அணியைக் காப்பாற்றியபோது பிசிசிஐ தலைவர் கங்குலி எனக்குத் குறுந்தகவல் அனுப்பினார். என்னுடைய ஆட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி, அவர் பதவியில் இருக்கும் வரை எதைப் பற்றியும் நான் கவலைப்படக்கூடாது என்றார். அது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆனால் வெகு சீக்கிரமாக எல்லாமே மாறியது ஏன் எனக்குப் புரியவில்லை” என்று தெரிவித்தார். சஹாவின் இந்தப் பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.