
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. நேற்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அர்ஷிதீப் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்களை எடுத்த வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 117 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும், தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக அப்போட்டியில் அறிமுகமாக விளையாடிய சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் போட்டியிலேயே அரை சதமடித்த 4ஆவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
முன்னதாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் தொடரில் குஜராத்து அணிக்காக அறிமுகமான அவர் 2023 இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதைத்தொடர்ந்து இந்தியா ஏ அணிக்காக பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்த அவர், கவுண்டி முதல் ரஞ்சி கோப்பை வரை அனைத்து விதமான உள்ளூர் தொடர்களிலும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.