
பொரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. குறிப்பாக லீக் மற்றும் அரையிறுதியில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று மிரட்டிய இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் சுமாராக பேட்டிங் செய்து 241 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 137, லபுஷாக்னே 58 ரன்கள் எடுத்து 6ஆவது கோப்பையை வென்று சாதனை படைக்க உதவினார்கள். அந்த வகையில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறையாவது சொந்த மண்ணில் இந்தியா நிறுத்தும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் வேதனையுமே பரிசாக கிடைத்தது.
முன்னதாக இப்போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 47 ரன்கள் எடுத்த போதிலும் எஞ்சிய வீரர்கள் பிட்ச் மெதுவாக இருந்ததால் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் இத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடியது போல இப்போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் அவசரப்பட்டு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானதே தோல்வியின் முதல் படியாக அமைந்ததாக சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.