மாஸ்டர்ஸ் லீக் 2025: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நேற்று நவி மும்பையில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு - சச்சின் டெண்டுல்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராயுடு 5 ரன்னிலும், டெண்டுல்கர் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்கீரத் சிங் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டூவர்ட் பின்னி தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய குர்கீரத் சிங் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 68 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டூவர்ட் பின்னியும் ஆட்டமிழந்தார். இறுதியில் யுவராஜ் சிங் மற்றும் யூசுப் பதான் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 31 ரன்களையும், யுசூப் பதான் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு உபுல் தரங்கா மற்றும் குமார் சங்கக்காரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உபுல் தரங்கா 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லஹிரு திரிமானே 24 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த குமார் சங்கக்காராவும் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சதுரங்கா டி சில்வாவும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அசேல குணரத்ன 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களையும், ஜீவன் மெண்டிஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் , இசுரு உதானா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை மாஸ்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now