
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் இந்திய அணி முதல் போட்டியை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலக, மற்றொரு நட்சத்திர வீரர் முகமது ஷமியும் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதில் எந்தெந்த வீரர்கள் அடுத்த போட்டிக்கு அணியில் இடம்பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜாவின் காயம் தீவிரமாக இருப்பதால் அவரால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் பங்கேற்க இயலாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் மூன்றாவது போட்டியிலேயே அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.