
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் விராட் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 131 ரன்களை குவித்தனர்.